ஜூலை 26, 2022

அஞ்சலிக் குறிப்பு - நந்தினி சேவியர்


ழத்து மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் கடந்த 16.09.2021 அன்று காலமானார். தேவசகாயம் சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் 25.05.1949 இல் மட்டுவில் சாவகச்சேரியில் பிறந்தவர். மட்டுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். எழுதுவினைஞராகத் தொழில் புரிந்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்து ஆகியவற்றில் ஈடுபட்டவர்.

1967ஆம் ஆண்டு ‘சூழ்;லாம்பு’ என்ற முதற்கதையுடன் சுதந்திரன் பத்திரிகையூடாகத் தனது இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தவர். இவருடைய எழுத்துக்கள் மல்லிகை, தாயகம், அலை, புதுசு, இதயம், ஒளி, சுட்டும்விழி, தூண்டி, கலை ஓசை, பூம்பொழில், வானொலி மஞ்சரி, வாகை, கலைமுகம், தலித், சிறுகதை மஞ்சரி, தொழிலாளி, சுதந்திரன், சிந்தாமணி, வீரகேசரி, தினகரன், தினக்குரல், ஈழமுரசு, ஈழநாடு, மாலைமுரசு ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. சென்னையில் நடைபெற்ற தமிழினி மாநாட்டில் பங்கேற்றவர். தனது இலக்கியச் செயற்பாட்டுக்காக அரச மற்றும் சமூக நிறுவனங்களில் பல விருதுகளைப் பெற்றவர். 

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் சங்கம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்,  தேசிய கலை இலக்கியப்பேரவை ஆகியவற்றில் இணைந்து செயற்பட்டவர். இதன் காரணமாக இளமைக் காலம் முதல் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தவர். ஆலய நுழைவுப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். தலித், சுட்டும் விழி, கலைமுகம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ள நந்தினி சேவியரின் நேர்காணல்களுக்கு ஊடாக அவரின் இலக்கிய சமூக அரசியற் செயற்பாடுகளை அறிந்து கொள்ளமுடியும். 

நந்தினி சேவியர் எழுதிய சிறுகதைகள் கட்டுரைகள் ஆகியன “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்”(1993), “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” (2011), “நந்தினி சேவியர் படைப்புகள்”(2014),  “பிடித்த சிறுகதை”(2019) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. அவர் எழுதியவற்றுள் பலவற்றை போர்ச்சூழலின் பல்வேறு சந்தர்ப்பங்களில் இழந்து விட்டதாக தன்வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். அவரின் கதைகள் சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவன. சமூக நீதியைக் கோருவன. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஏற்படுகின்ற நெருக்கடிகளை அதிகமும் தனது கதைகளில் பதிவு செய்தவர். 

கடந்த ஐம்பது வருடங்களாக வாசிப்பும் எழுத்தும் பேச்சும் செயற்பாடுமாக எம்முடன் வாழ்ந்த மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள், ஈழத்து இலக்கிய வரலாற்றில் எழுத்துக்களால் தனது தடத்தை ஆழமாகப் பதிவு செய்தவர். அவரின் எழுத்துக்கள் தொடர்ந்தும் வாசிக்கப்படவேண்டியவை. தொகுப்பு வடிவம் பெறாத அவரின் படைப்புக்கள் எதிர்காலத்தில் நூலாக்கப்படவேண்டும். அன்னாருக்கு ‘இலக்கிய வெளி’யின் சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

சு.குணேஸ்வரன்  

இலக்கிய வெளி, இதழ் 2, கனடா.



ஜூலை 11, 2022

அநியாய உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்புக் கூறுவது?




அண்மைக்காலத்தில் விபத்து, தற்கொலை, வன்கொடுமை முதலானவற்றினூடாக அநியாயச் சாவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவை எதேச்சையாக நடக்கின்றனவா அல்லது குறித்த நபர்களின் கவனமின்மையால் நடக்கின்றனவா அல்லது குடும்பங்களின் பொறுப்பின்மை மற்றும் சமூக நிறுவனங்களின் கண்டுகொள்ளாத தன்மைகளால் நிகழ்கின்றனவா?
முப்பது வருடத்திற்கு மேலான யுத்தத்தினால் நாங்கள் இழந்தவை அதிகம். அந்த இழப்புக்களின் கண்ணீர்ப் படலங்கள் இன்னமும் நீங்கவில்லை. குண்டுவெடிப்புக் காலங்களில்கூட வீதியோரங்களில் திறந்தவெளிப் பதுங்கு குழிகளை அமைத்து மக்கள் தமது உயிர்களைப் பாதுகாத்து வந்தனர். பாடசாலை மாணவர்கள் அதிகமும் தம்மையும் அயலவரையும் பாதுகாத்துக்கொள்ளும் முதலுதவிப் பயிற்சியையும் அறிந்திருந்தனர்.
தற்காலத்தில் அநியாய உயிரிழப்புக்களை எங்களால் தடுக்கமுடியாது இருப்பதற்குக் காரணம் யாதாக இருக்கமுடியும்?
விபத்தினால் உயிரிழப்போர் தொகையே அதிகமாக இருக்கின்றது. இதற்கு போக்குவரத்து நெருக்கடி மற்றும் வீதிகளைக் குறை சொன்னாலும் குறித்த நபர்களின் அசண்டையீனமும் மற்றவர்களை ஒரு பொருட்டாக மதிக்காத திமிர்த்தனமும் காரணமாக இருப்பதாக எண்ணுகிறேன்.
நேரிலும் குறுக்கு வழியிலும் வருகின்ற அதிக பணப்புழக்கம் சாதாரணமானவர்களை ஒரு பூச்சிபோல ஏளனம் செய்வது மட்டுமல்லாமல் பெற்றோரின் கண்டிப்பு கைவிட்டுப் போனமையும் காரணமாக இருக்கலாம். சிறிய விடயங்களைக்கூடப் பேசித் தீர்க்கமுடியாத சந்ததியொன்று நியாயம் கதைப்பவரிடம் கைநீட்டுவது முதல் தாமே சட்டத்தைக் கையிலெடுத்து தீர்ப்பு வழங்குவதுவரை காண்கின்றோம்.
பொதுப்பரீட்சை முடியும் இறுதிநாளில் மாணவர் பொதுச் சொத்துக்களைச் சேதமாக்குவர் என்றறிந்து அரசாங்கமே சுற்றறிக்கை விடும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
கிராமங்களில் இருக்கும் பொது நிறுவனங்கள் பெயருக்கு இருக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்கவும் வழிகாட்டலைச் செய்யவும் முன்வரவேண்டும். ஏதாவது உதவித் திட்டங்களுக்காக மட்டும் ஒன்றுகூடுவதற்கு மட்டுமா பொதுநிறுவனங்கள்? ஒருவரை இழப்பதன் வலியும் வேதனையும் அந்தக் குடும்பத்திற்குத்தான் தெரியும்.
எனவே, இந்த நிலைமைகளை மாற்ற நாங்கள் என்ன செய்யலாம்.
சமூகச் செயற்பாட்டாளர்கள் கிராமங்கள் தோறும் செயற்படவேண்டும். பெற்றோர் கூடிய கரிசனை எடுத்து பிள்ளைகளை வழிப்படுத்தவேண்டும். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற தலைக்கனமும் குடும்பப் பெருமைகளை பறைசாற்ற கற்றோர் மற்றோரின் கருத்துக்களைச் செவிமடுக்காத திமிர்தனமும் சரியான ஆலோசனை வழிகாட்டல் இல்லாத நிலைமைகளும் இவ்வாறானவைகளுக்கு வழிவகுக்கின்றன.
இவற்றை தவிர்த்து எமது சந்ததிகளை அறிவுள்ள ஆளுமையுள்ள செயற்றிறனுள்ளவர்களாக மாற்றுவதற்கு படைப்பாளர்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் முன்வருவார்களா?

- சு.குணேஸ்வரன்

ஜூலை 02, 2022

எனது இணைய உரையாடல்கள்

 மஹாகவியின் வானொலி நாடகங்கள்

புத்தாக்க அரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்னாட்டு அரங்கக் கதையாடலில் மஹாகவியின் வானொலி நாடகங்கள் பற்றி நிகழ்த்திய உரை (டிசம்பர் 2021)


அ. முத்துலிங்கம் சிறுகதைகள் 

அ. முத்துலிங்கம் சிறுகதைகளில் உலக அனுபவங்கள் என்ற தலைப்பில் இலக்கியவெளி இணைய உரையாடலில் நிகழ்த்தியது (நவம் 2020)