ஜூன் 27, 2020

உயர்தரம் தமிழ்ப் பாடம் கற்கும் மாணவருக்கு,


பிச்சமூர்த்தியின் "நெருக்கடி" சிறுகதை
பாடசாலை மாணவர்கள் கற்பதற்காக குறிப்புக்கள்.
- சு. குணேஸ்வரன்


க.பொ.த உயர்தரம் கற்கும் மாணவர்கள் இவற்றைத் தமது கற்றல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.


வடமராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டிலான நிகழ்நிலை வகுப்பு

22.06.2020 திங்கள் காலை9.00,  (ID:568 131 5051, P.W:Vada2020)

வளவாளர் : கலாநிதி சு.குணேஸ்வரன்
(ஆசிரியர், யா/ தொண்டைமானாறு வீ.ம.வித்)


சிறுகதை – நெருக்கடி
சிறுகதை ஆசிரியர் : ந. பிச்சமூர்த்தி

ஆசிரியர் அறிமுகம் :
ந. பிச்சமூர்த்தி (1900- 1976)
இயற்பெயர் : வேங்கட மகாலிங்கம்
முதற்சிறுகதை : சயன்சுக்குப் பலி (1932)
மணிக்கொடி கால எழுத்தாளர், பாரதிக்குப் பின்னர் தமிழில் புதுக்கவிதை முன்னோடி
ஈடுபட்ட துறைகள்  : மரபுக் கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, ஓரங்க நாடகம், கதைக்
                                    கட்டுரைகள், புதுவிதக்கட்டுரைகள்.

படைப்புக்கள் :
பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்)                 மோகினி(சிறுகதைகள்
மாங்காய்த் தலை(சிறுகதைகள்                              காபூலிக் குழந்தைகள் (சிறுகதைகள்
காதல் (கவிதைகள் )                                                 குயிலின் சுருதி (கவிதைகள் )
பிச்சமூர்த்தி கவிதைகள்                                           காட்டு வாத்து (கவிதைகள்)
வழித்துணை (கவிதைகள் )                                                 மனநிழல் (கட்டுரைத்தொகுதி)
குடும்ப ரகசியம் (குறுநாவல்)

“பரிவாலும் பதற்றத்தாலும் நிறைந்திருப்பது பிச்சமூர்த்தியின் கதையுலகம். வாழ்வின் சகல தளங்களிலும் புழங்கும் மனிதர்களையும் நிலவும் வாழ்வின் மேடுபள்ளங்களையும் சார்ந்து கவனித்ததன் பயனாக ஒரு பார்வையைச் சொந்தமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறது அவர் மனம். மனிதர்கள் வாழ்க்கை முறைகளைக் கவனித்து அறிந்து கொண்ட அறிவின் வீச்சினால் உருவானவை அல்ல அவர் கதைகள். மாறாக வாழ்வின் மேடுபள்ளங்களைக் கவனித்துக் கசிந்துருகிப் பரிவுற்றுப் பதறியதால் அவரைக் கரைத்துக் கொண்டு உருவானவை அவர் கதைகள். பாரதியின் பார்வையால் பாதிக்கப்பட்டு உருவான மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர் அவர்.” – பாவண்ணன்

“ந. பிச்சமூர்த்தியின் மனிதாபிமானம் பாவனையற்ற இயல்பான சகஜமான மானுட நேயம். இருபதாம் நூற்றாண்டுப் பிரக்ஞையில் வேரூன்றியது.” - ஜெயமோகன்

நெருக்கடி சிறுகதையின் கருப்பொருள்
மனிதனானவன் தன்னால் முடிந்தவரை மற்றவருக்கு மனிதாபிமானத்துடன் உதவுபவனாக இருக்கவேண்டும்.


கதைச்சுருக்கம்
அரசாங்கத்தின் தோட்ட நிலத்தில் சவுக்கை பயிரிட்டுப் பாதுகாக்கும் தொழில் புரிந்து வரும் சரவணமுத்து என்ற பிரதான பாத்திரம், அரசாங்கம் அதற்கெனக் கொடுத்த பணத்தை தன் குடும்பத்தின் வறுமை காரணமாகச் செலவழித்து விடுகிறார். அந்நிலம் சவுக்கைப் பயிர் செய்யப்படாமல் கட்டாந்தரையாகக் கிடக்கிறது. இது தொடர்பாக யாரோ அநாமதேயக் கடிதம் எழுதி குறித்த விவசாய இலாகாவுக்கு அனுப்பிவிடுகின்றனர். அதனை ஆராய விவசாய இன்பெக்டர் வருகிறார். இவரின் வீட்டு நிலைமைகளை அறிந்து கொள்கிறார். சரவணமுத்து உண்மை நிலையை எடுத்துக் கூறுகிறார். இன்ஸ்பெக்டர் இரண்டு வாரம் கழித்து வருவேன் அதன்பின்னர் 16 ஆம் நாள் அறிக்கை அனுப்பிவிடுவேன் என்கிறார். அரசாங்கம் சவுக்கு பயிரிடக் கொடுத்த பணத்தைக் கையாடிய தவறின் காரணமாக சரவணமுத்துவின் வேலை  பறிபோய்விடுகிறது. அரச பணத்தைத் திருடியதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இந்நிலையில் பக்கத்து பங்களா வீட்டுக்காரர் இவருக்கு உதவ முன்வருகிறார். அவர் மேன்முறையீடு அனுப்புமாறு கூறிவிட்டு விஞ்ஞான முறைப்படி ஒரு வருடப் பயிரை ஒரு மாதத்தில் விளைவித்துக் கொடுக்கிறார்.
மேன்முறையீட்டினைப் படித்த மாகாண அதிகாரி, தனது அந்தரங்க குமாஸ்தா மூலம் சவுக்கை செழிப்பாக வளர்ந்திருப்பதை அறிகிறார். இன்ஸ்பெக்டர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்ஸ்பெக்டர் மீளவும் சரவணமுத்துவைச் சந்தித்து குழப்பநிலை பற்றி அறிகிறார். சரவணமுத்துவும் உண்மை முழுவதையும் எடுத்துக் கூறுகிறார். பங்களாக்காரர் தனக்கு “விளக்கேற்றி வைத்ததாக” சரவணமுத்து கூறுகிறார். எல்லாவற்றையும் அறிந்த இன்ஸ்பெக்டர் சரவணமுத்துவின் கஸ்ட நிலையையும் அந்தர நிலையையும் புரிந்து கொண்டு ஓய்வின் எல்லையை நெருங்கும் தான் கஸ்டப்பட்டாலும் பரவாயில்லை என எண்ணி மனிதாபிமானத்துடன் உதவ முன்வருகிறார். இறுதியில் “பங்களாக்காரர் ஏற்றி வைத்த விளக்குக்கு நான் எண்ணெய்யாக இருந்து விட்டுப் பேகிறேன்” என்கிறார்.

பாத்திரப் பண்புகள்
(அ) சரவணமுத்து
·         அரசாங்கத் தோட்டமொன்றில் வேலை பார்ப்பவர் (குறைந்த சம்பளம், வேறு வேலை தேடமுடியாதவர்)
·         வறுமை நிறைந்த குடும்ப நிலையைக் கொண்டவர். (அதிகமான பிள்ளைகள், சீக்கு (நோய்), வீட்டுச்சூழல், பிள்ளைகளின் ஆடை)
·         அன்றாடச் செலவுகளுக்குக்  கஸ்டப்படுபவர்.
·         தான் செய்வது தவறு எனத் தெரிந்தும் குடும்பத்தின் இரண்டக நிலையில் அரச பணத்தைச் செலவு செய்தவர்.
·         தன் தவறுகளை மறைக்காமல் உண்மையைக் கூறும் இயல்புடையவர். (இன்ஸ்பெக்டரிடம் உண்மையைக் கூறுதல்)
·         தன் தவறுக்காக வருத்தியவர்.
·         பிறரது ஆலோசனைகளை ஏற்றுச் செயற்படுபவர்.
·         பிரச்சினைகளால் துவண்டு போய் இருப்பவர்.
·         பறவைகள்,இயற்கை இவற்றுடன் தன் வாழ்வை ஒப்பிட்டு நோக்குபவர். (குருவிகள்போல் இருந்தால் கவலை இல்லை என எண்ணியவர், வளரும் பயிரை சீந்தைக் கொடி சுற்றிக் கிடத்தல்)

(ஆ) இன்ஸ்பெக்டர்
·         விவசாய இலாகாவின் இன்ஸ்பெக்டர் பணியில் இருப்பவர். (சரவணமுத்துவின் சவுக்கை பயிர் பார்க்கச் செல்லல்)
·         பிழைகளைத் தட்டிக் கேட்பவர். (அரச பணத்தைச் செலவு செய்தமை பற்றி)
·         நேர்மைக்குப் பெயர் பெற்றவர். (இரண்டு வாரம் கழித்து அறிக்கை அனுப்புவேன் என்று கூறுதல்)
·         மற்றவர்கள் மீது இரக்க சுபாவம் உடையவர். (சரவணமுத்துவின் வீட்டு நிலைமை, இறுதியில் சந்தித்துபோது கூறிய வார்த்தைகள்)
·         உண்மை நிலைகளைத் தெளிவாக எடுத்துக்கூற வல்லவர். ( விவசாய இலாகா)

(இ) பங்களாக்காரர்
·         விவசாயக் கம்பனியில் வேலை பார்ப்பவர்.
·         மற்றவர் நிலையைப் புரிந்து கொள்ளும் மனப்பாங்கு உடையவர். (சரவணமுத்துவுடன் உரையாடுதல், அவரின் துன்பத்தைப் புரிந்து கொள்ளல்)
·         உதவி செய்யும் மனப்பாங்கு உடையவர். (மேன்முறையீடு, நவீன முறையில் பயிரிட உதவுதல்)
·         வீட்டுத்தோட்டப் பயிர் செய்வதில் ஆர்வமுடையவர். (பங்களா வீட்டுத்தோட்டம்)
·         நவீன விவசாய முறைகளைப் புரிந்து கொண்டவர். (கத்தரி, மற்றும் ஏனைய பயிர் வகை)

(ஈ) சென்னை மாகாண அதிகாரி
·         கண்டிப்பானவர். (சரவணமுத்துவின் மேன்முறையீட்டைப் பார்த்துக் கோபப்படுதல்)
·         உண்மையை ஆராயும் இயல்புடையவர். (தனது அந்தரங்க குமாஸ்தாவை அனுப்பி பயிர் செய்த விபரம் அறிய விரும்புதல் )
·         சட்டத்தின்படி செயற்படுபவர். ( இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுத்தல்)



நெருக்கடி சிறுகதையில் வெளிப்படும் சரவணமுத்துவின் குடும்ப நிலை
1. பொருளாதாரநிலைமை
அதிகமான குழந்தைகள் (அடிப்படை த் தேவைகள் நிறைவேற்றமுடியாமை)
உணவுப்பிரச்சினை (தோய்ந்து துடிப்பிடித்தவை போல் காணப்படும்குழந்தைகள் )
ஆரோக்கியக் குறைபாடு  ( பிள்ளைகள் நோயால் துவண்டிருத்தல் )
போதிய வருமானமின்மை  (ஆடையும் ஆடையின்மையும்)
2. வீட்டுச் சூழல் 
நொய்ந்த வீடு
பாவனைப் பொருட்கள் – கிழிந்த பாய்

                                                       
ஆசிரியர் மொழி நடை அல்லது எடுத்துரைப்பு
1.    எளிமையான சிறிய வாக்கியங்கள்.
2.    பேச்சுவழக்குப் பயன்பாடு (உரையாடல்கள் )
3.    எழுத்துவழக்கு (ஆசிரியர் கதைகூறல்)
4.    வடசொற்கள் மற்றும் பிறமொழிச் சொற்கள் தேவைக்கு ஏற்றவாறு எடுத்தாளுதல்  (புஷ்பம், ஜலம், குமாஸ்தா,  சர்க்கார், பைசல் (முடிவாக்குதல்))
5.    ஆங்கிலச் சொற்கள் ( இன்ஸ்பெக்டர், கம்பனி, அப்பீல், நோட்டீஸ்)

6.    அணிப்பயன்பாடு (உவமை அணிகள் )
·         தேன்சிட்டுக்கூடு ஒன்று லோலாக்கைப்போல் தொங்கிக் கொண்டிருந்தது.
·         மலைப்பாம்பு சுற்றிக் கொள்வதுபோல் சீந்தில் கொடியொன்றும் சுற்றிக் கொண்டிருந்தது.
·         உலகத்தில் பிழைக்க முயலும்போது சீந்தில் கொடியைப்போல தரித்திரமும்            கூடவந்து கழுத்தை நெறிக்காமல் இருக்காதுபோல் இருக்கிறது.
·         பூச்சி பிடித்த பீர்க்கன் இலை மாதிரி இருக்கிறது.
·         ஆற்றிலே மிதக்கும் சுள்ளியைப் போன்றதுதான் அவர் மனப்பான்மை.

7.    மரபுத்தொடர்கள் ( கொழுகொம்பு, செப்பிடுவித்தை)
8.    கதாபாத்திரங்களின் உரையாடலுக்கூடாக கதையை இயல்பாகவே நகர்த்திச் செல்லுதல்.
9.    இயற்கைக்  காட்சிகளுடன் வாழ்க்கையைத் தொடர்புபடுத்திப் பார்த்தல் (சிந்தில் கொடி (அவரைக்கொடி)

10.               வருணணைப் பயன்பாடு (பறவைகள், பயிர்கள், செடிகொடிகள்)
·         நாரத்தை மரக்கிளையிலிருந்து தொங்கும்சிட்டுக் குருவிக்கூடும் சிட்டுக் குஞ்சுகளுக்கு உணவூட்டுதலும்
·         பயிர் செய்யப்பட்ட கொடியைச் சுற்றிக் கிடக்கும் சீந்திக் கொடிகள்.
11. உணர்ச்சிச் செறிவான சிந்தனைகள் (தரித்திரத்தில் உழலும் மனத்துக்குத் தோட்டத்துப் பச்சையும் சிவப்பு காய்கறிகளும் புஸ்பங்களின் மணமும் விபரிக்க முடியாத ஆறுதலைக் கொடுக்கும்)
12. யதார்த்தபூர்வமான சித்திரிப்பு      
13. மனிதாபிமான சிந்தனையை வலியுறுத்துதல்

தலைப்பின் பொருத்தப்பாடு
இச்சிறுகதையில் பிரதான பாத்திரமாகிய சரவணமுத்துவின் நெருக்கடிகள் கதையில் பிரதான பேசுபொருளாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அவர் போதிய வருமானமின்மை காரணமாக பல்வேறு நெருக்கடிகளை வாழ்வில் எதிர்கொள்கிறார். வீட்டுச்சூழல் அடிப்படை வசதிகளற்ற நெருக்கடியில் உள்ளது. பிள்ளைகளின் வறுமையும் அவர்களின் தேவைகளும் நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளன. நோயால் மாறி மாறி அவதிப்படும் நிலையும் காட்டப்படுகிறது. இவை எல்லாம் சேர்ந்து அவரது அரசபணிக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றன. இவை மாத்திரமன்றி இன்ஸ்பெக்டர், மேலதிகாரி ஆகியோரும் சரவணமுத்துவால் தமது பணியில் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்.எனவே  இச்சிறுகதைக்கு நெருக்கடி என்று தலைப்பிட்டமை மிகப்பொருத்தமாகவே அமைந்துள்ளது.

பயிற்சி வினாக்கள்
1. நெருக்கடி என்ற சிறுகதை வலிறுத்தும் படிப்பினை யாது?
2. மனிதனின் வாழ்க்கை அம்சங்களை இயற்கையுடன் தொடர்புபடுத்தும் வகையினை எடுத்துக்காட்டுக.
3. சரவணமுத்து-  பங்களாக்காரர் ஆகிய இரண்டு பாத்திர உருவாக்கம் தொடர்பாக நீர் கருதுவது யாது?       
                                                 
மேலதிக குறிப்பு : சவுக்கு
சவுக்கு விரைவாக வளரும் இயல்புடைய பசுமை மாறா அழகிய தோற்றத்துடன் கூடிய ஊசியிலைகளைக் கொண்ட மரமாகும். இம்மரம் நீளமாகவும், உருண்டை வடிவத்திலும் வளரும் இயல்புடையவை. அரிதாக சில வேளைகளில் கிளைவிடும் இயல்புடையது. இயல்பாக அடாந்து வளரும் இம்மரத்தின் கீழ் புல் பூண்டுகள் சிறு குத்துச்செடிகள் மட்டுமே வளரும். இம்மரத்தின் ஆயுட்காலம் 50 ஆண்டு காலமாகும். நல்ல சூழல் இல்லாத இடங்களில் கூட 25 ஆண்டுகள் வளரும். சவுக்கின் அனைத்துப்பகுதிகளும் பயன்படுபவை. சவுக்கின் ஓராண்டு பயிராக இருக்கும்போது வேளாண்மைப் பயிர்களில் குறிப்பாக நிலக்கடலை, ஊடுபயிராக வளர்க்கலாம். மணற்பாங்கான நிலங்களில் தர்ப்பூசணியும், செம்மண்ணில் எண்ணெய் வித்து பயிரான எள்ளையும் கடின மண்ணில் பயறு வகைகளையும் ஊடுபயிராகப்பயிரிடலாம்.சவுக்கு மரம் காகிதக்கூழ் செய்ய ஏற்றது. உழவர்கள் காகிதக்கூழுக்காகவே இம்மரத்தை பயிரிட்டு வருகின்றனர். உலகம் முழுவதும் சவுக்கு மிகச்சிறந்த விறகு மரமாகக் கருதப்படுகிறது. பச்சை மரமாக இருக்கும்போதும் கூட இது எரியும் இயல்புடையது.


மே 04, 2020

கொரோனாப் பொழுதுகள் - 1




   உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவினால் மனிதர்களின் பாடுகள் பலவிதமானவை. அடிப்படை வசதிகள் மட்டுமட்டாக இருக்கும் மக்களின் பாடுகள் ஒருபுறமும் ஓரளவு பொருட்களைக் கொள்வனவு செய்து வைத்திருப்பவர்கள் மறுபுறமுமாக காலம் கடந்து கொண்டிருக்கிறது.

 இவற்றுக்கு மத்தியில் உதவி தேவைப்படும் மக்களுக்கு பொதுஅமைப்புக்களும் சமூகச் செயற்பாட்டாளர்களும் தனிப்பட்ட நபர்களும் செய்யக்கூடிய உதவிகளை நிச்சயமாக வரவேற்க வேண்டும். அதேநேரம் இரவுபகல் பாராது மக்களின் நலன்களில் அக்கறை கொண்டு உழைக்கும் வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவற்துறையினர், படையினர், சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றும் வர்த்தகர்கள், சமூக அக்கறையுடையோர் முதலானோரின் பணிகள் நினைக்கப்படவேண்டியவை.

   வைத்தியர்களின் அறிவுறுத்தல்களை கருத்திற்கொண்டு மக்கள் தங்களால் முடிந்தளவு பாதுகாப்பு வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள். இதற்குள் அவசிய தேவைகள் எதுவுமற்று "புதினம் புடுங்க" குறுக்கால் ஓடுபவர்களும் எந்தச் சிந்தனையுமில்லாமல் திரிபவர்களுக்கும் அருகில் இருப்பவர்கள்தான் அமைதியாக எடுத்துக்கூறி சமூக ஒழுங்கினை நெறிப்படுத்தவேண்டும்.

 குடும்பத்தில் இருக்கும் அங்கத்தவர்களை மிக அமைதியாகக் கையாளவேண்டிய தேவையும் ஒவ்வொரு குடும்பத்தலைமைக்கும் அந்தந்தக் குடும்ப உறுப்பினர்களை வழிநடாத்தும் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டி மிக முக்கியமான பொறுப்பாக இருக்கிறது.

  எமது குடும்பங்களிலும் அயலிலும் இருக்கும் படிக்கும் பிள்ளைகளை கவனமாக வழிநடாத்தவேண்டிய காலம் இதுவாகும். அவர்களின் உடல்நலத்தைக் காக்கின்ற அதேவேளை அவர்களின் உளநலத்திலும் அக்கறையுடன் செயற்படவேண்டியுள்ளது. பிள்ளைகளை நேரஒழுங்கில் படிக்க வைக்கலாம். இணையத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பிள்ளைகள் படிப்பதற்கு ஏற்ற பாடக்குறிப்புக்களும் பயிற்சிகளும் (online) இணையத்தில் கற்றலுக்கும் அதிகமான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஓவியம் வரைய வைக்கலாம். நல்ல திரைப்படங்களைப் பார்க்கலாம். கதைப்புத்தகங்களை வாசிக்க வைக்கலாம். விளையாட்டுக்களில் பொழுதுபோக்கலாம்.

   வள்ளுவர் "வான்சிறப்பு" என்ற அதிகாரத்தில் நீரில்லாவிடில் உலக ஒழுங்கும் குலையும் என்று கூறினார். உண்மையில் நீருக்கும் ஒழுக்கத்திற்கும் என்ன தொடர்பு என்றுகூட பலர் யோசிக்கலாம். அதேபோல் கோரோனாவினால் சமூக ஒழுங்கு குலைவதற்கு யாரும் காரணமாக இருக்கக்கூடாது.

  வீட்டில் இருக்கும் பெரிய மனிதர்கள் பொறுப்பானவர்களாக நடந்து கொள்ளவேண்டும். அல்லாவிட்டால் பக்கத்துவீட்டாரின் நாயைக் கட்டிவைத்ததற்காக ஒரு இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டான் என்ற செய்திபோல எமது சமூக ஒழுங்கும் குலைந்துவிடும். அவதானமாக இருப்போம். அருகில் இருப்பவரையும் காப்போம்.

மார்ச் 07, 2020

2ஆவது உலகத் திருக்குறள் மாநாடு


2ஆவது உலக திருக்குறள் மாநாடு 2020 பெப்ரவரி 21,22 மற்றும் 23 ஆந் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு "திருக்குறளில் நீர்ப்பண்பாடு" என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தபோது...






மேலும் சில படங்கள் 

 தி. செல்வமனோகரன் 





 க. அருந்தாகரன் 

மேழிக்குமரன்