பிப்ரவரி 02, 2017

என் பத்துவயது நினைவுகளில் ஊறியிருந்த 'பெரிய கடற்கரை' இப்போதும் அழகுதான்




என் பால்யவயது நினைவுகளில் ஒரு கனவுக்காட்சிபோல் மிதந்துகொண்டிருக்கும் என் கிராமத்தின் வனப்பு மிகுந்த இடங்களில் என்னால் மறக்கமுடியாத இடங்களில் ஒன்று தொண்டைமானாறு பெரிய கடற்கரை. அதிகாலையிலேயே களைகட்டும் பெரிய கடற்கரை சந்தை. அதன் அருகிலேயே கடலையும் மணலையும் தொட்டு நிற்கும்அந்தக்கால பழுதடைந்த பெரிய இயந்திரப்படகு. தெற்கிலிருந்து கடலைநோக்கி ஓடிக்கொண்டிருக்கும் மழைநீர் தேங்கிய வாய்க்கால். அதில் தென்னோலைகளை ஊர்மக்கள் ஊறப்போட்டிருக்கும் காட்சி. பனையோலை மூரியாலும் தென்னோலைகளாலும் அடைக்கப்பட்ட காணிகள். வருடத்தில் ஒருமுறை வீரகாமாளி அம்மன் ஆலயத்தின் விசேட திருவிழாவும் மின்வெளிச்சத்தின் அலங்காரங்களும். அந்தத்திருவிழாவுக்காக பெரியவர்களால் கட்டப்பட்ட கயிற்றுக்கு அப்பால் மணலில் கிடைத்த சிறிய ஊரிக்கற்களைப் பொறுக்கி நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் எறிந்து விளையாடிய ஞாபகங்கள்.

அந்த இடமே இப்போ அடியோடு மாறிவிட்டாலும் பெரிய கடற்கரை தன் அழகை மட்டும் ரகசியமாக தேக்கி வைத்திருக்கிறது. அண்மையில் எனது ஆசிரிய நண்பர் ஒருவர் கேட்டார், "இப்படி ஒரு அழகான இடத்தை எங்களுக்குக் காட்டாமல் மறைத்தா வைத்திருந்தீர்கள்" என்று!
-சு.குணேஸ்வரன் -