குணேஸ்வரன்
வலைப்பதிவு
ஜனவரி 27, 2023
அஞ்சலி: வேலுப்பிள்ளை பரமானந்தம்
ஜூலை 26, 2022
அஞ்சலிக் குறிப்பு - நந்தினி சேவியர்
ஈழத்து மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் கடந்த 16.09.2021 அன்று காலமானார். தேவசகாயம் சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் 25.05.1949 இல் மட்டுவில் சாவகச்சேரியில் பிறந்தவர். மட்டுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். எழுதுவினைஞராகத் தொழில் புரிந்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்து ஆகியவற்றில் ஈடுபட்டவர்.
1967ஆம் ஆண்டு ‘சூழ்;லாம்பு’ என்ற முதற்கதையுடன் சுதந்திரன் பத்திரிகையூடாகத் தனது இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தவர். இவருடைய எழுத்துக்கள் மல்லிகை, தாயகம், அலை, புதுசு, இதயம், ஒளி, சுட்டும்விழி, தூண்டி, கலை ஓசை, பூம்பொழில், வானொலி மஞ்சரி, வாகை, கலைமுகம், தலித், சிறுகதை மஞ்சரி, தொழிலாளி, சுதந்திரன், சிந்தாமணி, வீரகேசரி, தினகரன், தினக்குரல், ஈழமுரசு, ஈழநாடு, மாலைமுரசு ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. சென்னையில் நடைபெற்ற தமிழினி மாநாட்டில் பங்கேற்றவர். தனது இலக்கியச் செயற்பாட்டுக்காக அரச மற்றும் சமூக நிறுவனங்களில் பல விருதுகளைப் பெற்றவர்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் சங்கம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம், தேசிய கலை இலக்கியப்பேரவை ஆகியவற்றில் இணைந்து செயற்பட்டவர். இதன் காரணமாக இளமைக் காலம் முதல் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தவர். ஆலய நுழைவுப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். தலித், சுட்டும் விழி, கலைமுகம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ள நந்தினி சேவியரின் நேர்காணல்களுக்கு ஊடாக அவரின் இலக்கிய சமூக அரசியற் செயற்பாடுகளை அறிந்து கொள்ளமுடியும்.
நந்தினி சேவியர் எழுதிய சிறுகதைகள் கட்டுரைகள் ஆகியன “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்”(1993), “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” (2011), “நந்தினி சேவியர் படைப்புகள்”(2014), “பிடித்த சிறுகதை”(2019) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. அவர் எழுதியவற்றுள் பலவற்றை போர்ச்சூழலின் பல்வேறு சந்தர்ப்பங்களில் இழந்து விட்டதாக தன்வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். அவரின் கதைகள் சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவன. சமூக நீதியைக் கோருவன. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஏற்படுகின்ற நெருக்கடிகளை அதிகமும் தனது கதைகளில் பதிவு செய்தவர்.
கடந்த ஐம்பது வருடங்களாக வாசிப்பும் எழுத்தும் பேச்சும் செயற்பாடுமாக எம்முடன் வாழ்ந்த மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள், ஈழத்து இலக்கிய வரலாற்றில் எழுத்துக்களால் தனது தடத்தை ஆழமாகப் பதிவு செய்தவர். அவரின் எழுத்துக்கள் தொடர்ந்தும் வாசிக்கப்படவேண்டியவை. தொகுப்பு வடிவம் பெறாத அவரின் படைப்புக்கள் எதிர்காலத்தில் நூலாக்கப்படவேண்டும். அன்னாருக்கு ‘இலக்கிய வெளி’யின் சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சு.குணேஸ்வரன்
இலக்கிய வெளி, இதழ் 2, கனடா.
ஜூலை 11, 2022
அநியாய உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்புக் கூறுவது?
- சு.குணேஸ்வரன்
ஜூலை 02, 2022
எனது இணைய உரையாடல்கள்
மஹாகவியின் வானொலி நாடகங்கள்
புத்தாக்க அரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்னாட்டு அரங்கக் கதையாடலில் மஹாகவியின் வானொலி நாடகங்கள் பற்றி நிகழ்த்திய உரை (டிசம்பர் 2021)
அ. முத்துலிங்கம் சிறுகதைகள்
அ. முத்துலிங்கம் சிறுகதைகளில் உலக அனுபவங்கள் என்ற தலைப்பில் இலக்கியவெளி இணைய உரையாடலில் நிகழ்த்தியது (நவம் 2020)
அக்டோபர் 02, 2021
இலக்கியம் தந்த நட்பு
அண்மையில் குமிழி நாவலை எழுதி வெளியிட்ட சுவிஸ் ரவி அவர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல் கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன. தற்போதைய கொவிட் சூழலில் கற்றலுக்கு மிக அவசியமான பாட அலகுகளைத் தெரிவு செய்து தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய ஆசிரிய நண்பர்களின் உதவியுடன் தரம் 5, க.பொ.த சாதாரணதரம் மற்றும் உயர்தரப்பிரிவு மாணவர்களுக்குத் தேவையான கையேடுகள் (வித்தியாலய பாட ஆசிரியர்கள் தயாரித்தவை, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைத் திணைக்களத்தின் புள்ளித்திட்டம், துறைசார்ந்தவர்களின் குறிப்புகள் ஆகியவை ) வழங்கப்பட்டன.
தரம் 5ற்குரியது, தமிழ்
(O/L), ஆங்கிலம், விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம், தமிழ் (A/L), அளவையியல் , நாடகமும்அரங்கியலும்
முதலான கையேடுகள் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இவற்றில் க.பொ. த சாதாரணதரம், மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான தமிழ்ப்பாடத்திற்கான
ஒரு தொகுதி கையேடுகள் சிதம்பரக் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.
ரவி அவர்கள் குமிழி
நாவல் விற்பனை மூலம் பெறப்பட்ட இருபத்தையாயிரம்
ரூபாவை அனுப்பி வைத்து இந்தப் பணத்தை உங்கள் மாணவர்களுக்குப் பயன்படுத்துங்கள்
என்று கூறியிருந்தபோது என்ன செய்யலாம் என ஆசிரிய நண்பர் ரூபரஞ்சனுடன் ஆலோசித்து இறுதியில்
இந்த முயற்சியை மேற்கொண்டோம். கொவிட் பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 3 கட்டங்களாகப்
பிரதிசெய்து தந்த சர்மிலன் பிறிண்டேர்ஸ் இன்பனுக்கும்
கையேடுகளைத் தெரிவுசெய்து தந்த ஆசிரியர்களுக்கும் நண்பர் ரவி அவர்களுக்கும் மேலான நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் சில படங்கள்