ஜூன் 03, 2023

கிளிநொச்சி ஆய்வரங்கு

 23.05.2023 இல் கிளிநொச்சியில் நடைபெற்ற ஆய்வரங்கிலிருந்து... (ஒளிப்படங்களுக்கு நன்றி :அகில்)









ஒரு கவிதை

 நவலிய சிங்களப் பத்திரிகையில் (01.05. 2023) துவாரகனின் கவிதையாகிய "வெட்டுக்கிளிகளின் நூற்றியெட்டுக் கதைகள்' வந்துள்ளது. சிங்களத்தில் மொழிபெயர்த்த இப்னு அஸூமத் அவர்களுக்கும் கபில எம். கமகே அவர்களுக்கும் & நவலிய பத்திரிகைக்கும் மிக்க நன்றி.



ஜனவரி 27, 2023

அஞ்சலி: வேலுப்பிள்ளை பரமானந்தம்



எங்கள் தலைமுறையின் வழிகாட்டி

னது ஆசானும் சமூக முன்னோடியும் பருத்தித்துறை ப.நோ.கூ.ச முன்னாள் வர்த்தக முகாமையாளருமாகப் பணியாற்றிய அன்புக்குரிய வே. பரமானந்தம் (விசயண்ணா) அவர்களின் பிரிவு இன்று (15.12.2022) நிகழ்ந்தது.

கெருடாவிலில் படித்த தலைமுறைகளை உருவாக்குவதில் முன்னோடியாகச் செயற்பட்டவர்களில் ஒருவர் வே.பரமானந்தம் அவர்கள். சமூகத்தின் பலதரப்பட்டவர்களும் பல்வேறு துறைகளில் மிளிர்ந்த காலம். எமது கிராமத்தின் தாய்ச்சங்கமாக இருந்த விவேகானந்தா சனசமூக நிலையத்தை மையப்படுத்திய சமூகச் செயற்பாடுகள் பலதரப்பட்டவை. கல்வி நடவடிக்கைகள், விளையாட்டுச் செயற்பாடுகள், கலைச்செயற்பாடுகள். குறிப்பாக, சமூக நாடகங்களுக்கு ஊடாக திராவிடக் கருத்துக்களும் ஒழுக்க விழுமியங்களும் தனிமனித முன்னேற்றம் குறித்த கருத்துக்களும் மக்களுக்குப் பரப்பப்பட்ட காலம். ஒருபுறம் மக்களின் உள்ளூர் உற்பத்தியை, சேமிப்பை ஊக்கப்படுத்தும்; சர்வோதயம், சிக்கன கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கிய காலம். கோயில் திருவிழாக் காலங்களில் கூட வானுயர்ந்த சிகரங்களை நான் சிறுவனாக இருந்தபோது பார்த்திருக்கிறேன். இப்போது அவை கனவுபோல் உள்ளன. இந்தக் காலங்களில் எல்லாம் பரமானந்தம் அவர்களின் கைகளும் இணைந்திருந்தன.
கிராமத்திற்கு மின்சார வசதி இல்லாத காலம். ரியூசன் முடிய இரவாகிவிடும். 'அரிக்கன் லாம்பு' வெளிச்சத்தில் எங்களை ஒவ்வொருவராக வீடுகளில் சேர்ப்பித்து தனது வீடு சென்ற காலங்கள் நினைவை மீட்டுகின்றன.

நாங்கள் வளர்ந்து உயர்தர வகுப்புகளில் கற்றபோது எங்களையும் தனது அடுத்தகட்ட நகர்வுக்குத் தயார்ப்படுத்தினார். நான் சபைமுன் பேசப்பழகியது மற்றுமொரு களமாகிய அண்ணா சனசமூக நிலையத்தில். இலக்கிய ஈடுபாட்டை வளர்த்தது வேறொரு களத்தில். பட்டிமன்றங்கள் என்றால் அவரின் தலைமையில் கூடுவோம். ரியூசன்களை நடத்தினோம். நாடகங்கள் நடித்தோம். கலை இலக்கிய சாகரம் என்று ஓர் இலக்கிய அமைப்பை உருவாக்கி அதற்கூடாக 'சக்தி' என்ற சஞ்சிகையை வெளியிட்டோம். எல்லா இடத்திலும் அவர் இருந்தார். வழிப்படுத்தினார். சமூக நிகழ்வுகளில் அவரின் கணீரென்ற கம்பீரமான குரல் எல்லோரையும் வசீகரிக்கும்.

அவரிடம் கற்ற எனது வயது தோழரும் தோழியரும் இன்று பல தொழில்களை ஆற்றுகிறார்கள். ஆசிரியர்களாக நிர்வாக உத்தியோகத்தர்களாக இருக்கிறார்கள். எங்கள் அடுத்த தலைமுறைகள் சிறப்பாகக் கற்கிறார்கள். அவரின் ஐந்து பிள்ளைகளும் நன்றாகக் கற்றார்கள்.அரச பணிகளில் இருக்கிறார்கள்.

இன்று காலம் மாறிவிட்டது. செய்த நன்மைக்கு நன்றிகூடச் சொல்ல மாட்டார்கள். கைத்தொலைபேசிக்குள் ஓர் உலகத்தை சிருஷ்டித்துக்கொண்டு மனித மனங்களைப் புறக்கணிக்கிறார்கள். புரளி பேசுகிறார்கள். சுயநலவாதிகளாக இருக்கிறார்கள். பண்பாட்டையும் ஒழுக்கத்தையும் தொலைத்துவிட்டு எது நல்லது எது கெட்டது என்பதுகூடத் தெரியாத அப்பாவிகளாக இருக்கிறார்கள். இவைதான் இன்றைய அதிகமான கிராமங்களின் நிலையாக இருக்கிறது.இந்த இடத்தில் தான் எனக்கு பரமானந்தம் அவர்களின் அர்ப்பணிப்பான சேவையும் அளப்பரிய சமூகப்பணியும் பெரிதாகத் தெரிகிறது.

ஒரு கல்வி கற்ற சமூகத்தை உருவாக்க பரமானந்தம் போன்றவர்கள் கைகாட்டி விட்ட பாதை இன்னமும் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பாதையில் அவர் இன்னமும் எங்களை வழிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆழ்ந்த அஞ்சலிகள் ஆசானே!

- கலாநிதி சு. குணேஸ்வரன்

ஜூலை 26, 2022

அஞ்சலிக் குறிப்பு - நந்தினி சேவியர்


ழத்து மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள் கடந்த 16.09.2021 அன்று காலமானார். தேவசகாயம் சேவியர் என்ற இயற்பெயர் கொண்ட நந்தினி சேவியர் 25.05.1949 இல் மட்டுவில் சாவகச்சேரியில் பிறந்தவர். மட்டுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திருஇருதயக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர். எழுதுவினைஞராகத் தொழில் புரிந்தவர். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, பத்தி எழுத்து ஆகியவற்றில் ஈடுபட்டவர்.

1967ஆம் ஆண்டு ‘சூழ்;லாம்பு’ என்ற முதற்கதையுடன் சுதந்திரன் பத்திரிகையூடாகத் தனது இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்தவர். இவருடைய எழுத்துக்கள் மல்லிகை, தாயகம், அலை, புதுசு, இதயம், ஒளி, சுட்டும்விழி, தூண்டி, கலை ஓசை, பூம்பொழில், வானொலி மஞ்சரி, வாகை, கலைமுகம், தலித், சிறுகதை மஞ்சரி, தொழிலாளி, சுதந்திரன், சிந்தாமணி, வீரகேசரி, தினகரன், தினக்குரல், ஈழமுரசு, ஈழநாடு, மாலைமுரசு ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. சென்னையில் நடைபெற்ற தமிழினி மாநாட்டில் பங்கேற்றவர். தனது இலக்கியச் செயற்பாட்டுக்காக அரச மற்றும் சமூக நிறுவனங்களில் பல விருதுகளைப் பெற்றவர். 

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் சங்கம், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்,  தேசிய கலை இலக்கியப்பேரவை ஆகியவற்றில் இணைந்து செயற்பட்டவர். இதன் காரணமாக இளமைக் காலம் முதல் சமூக நீதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டேயிருந்தவர். ஆலய நுழைவுப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். தலித், சுட்டும் விழி, கலைமுகம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ள நந்தினி சேவியரின் நேர்காணல்களுக்கு ஊடாக அவரின் இலக்கிய சமூக அரசியற் செயற்பாடுகளை அறிந்து கொள்ளமுடியும். 

நந்தினி சேவியர் எழுதிய சிறுகதைகள் கட்டுரைகள் ஆகியன “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்”(1993), “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” (2011), “நந்தினி சேவியர் படைப்புகள்”(2014),  “பிடித்த சிறுகதை”(2019) ஆகிய நூல்களாக வெளிவந்துள்ளன. அவர் எழுதியவற்றுள் பலவற்றை போர்ச்சூழலின் பல்வேறு சந்தர்ப்பங்களில் இழந்து விட்டதாக தன்வரலாற்றுப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். அவரின் கதைகள் சாதாரண மனிதர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துவன. சமூக நீதியைக் கோருவன. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஏற்படுகின்ற நெருக்கடிகளை அதிகமும் தனது கதைகளில் பதிவு செய்தவர். 

கடந்த ஐம்பது வருடங்களாக வாசிப்பும் எழுத்தும் பேச்சும் செயற்பாடுமாக எம்முடன் வாழ்ந்த மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் அவர்கள், ஈழத்து இலக்கிய வரலாற்றில் எழுத்துக்களால் தனது தடத்தை ஆழமாகப் பதிவு செய்தவர். அவரின் எழுத்துக்கள் தொடர்ந்தும் வாசிக்கப்படவேண்டியவை. தொகுப்பு வடிவம் பெறாத அவரின் படைப்புக்கள் எதிர்காலத்தில் நூலாக்கப்படவேண்டும். அன்னாருக்கு ‘இலக்கிய வெளி’யின் சார்பில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

சு.குணேஸ்வரன்  

இலக்கிய வெளி, இதழ் 2, கனடா.