குணேஸ்வரன்
வலைப்பதிவு
பிப்ரவரி 25, 2026
பேராசிரியர் ஆறுமுகம் சதாசிவத்தின் “ஆராய்ச்சிக் கட்டுரை எழுதும் முறை”
பொன்னையா விவேகானந்தனின் நான்கு நூல்கள் வெளியீடு
தமிழ் தேசியக் கலை இலக்கியப் பேரவை தாய்வீடு இதழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட விவாதிகள் கழகம் இணைந்த ஏற்பாட்டில் தமிழ் நாட்டு ஓவிய ஆளுமைகள் மருது மற்றும் ஜீவா ஆகியோரின் சந்திப்பும் சிறப்புரையும் மூத்த ஊடகவியலாளர், விரிவுரையாளர் பொன்னையா விவகானந்தனின் நான்கு நூல்கள் அறிமுக நிகழ்வும் அரங்கம் நிறைந்த மக்கள் மத்தியில் 18.02.2025 இல் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்டு 'பெயர்வுத் தமிழ்ச் சமூகம் இருப்பும் இடர்களும்' நூல் பற்றி உரையாற்றியபோது
நவம்பர் 05, 2025
'மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்' நிகழ்வில்
யா /பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலத்தில் நூலக வாரத்தையொட்டிய (31.10.2025) 'மறுமலர்ச்சிக்காக வாசிப்போம்' நிகழ்வில் பங்குபற்றியபோது.
பாடசாலையின் முகநூற்பதிவிலிருந்து....
"யா/வேலாயுதம் மகாவித்தியாலயத்தில் 31.10.2025 வெள்ளிக்கிழமை வாசிப்பு மாதத்தைச் சிறப்பிக்குமுகமாக புத்தகக் கண்காட்சியும் மாணவர்களது சஞ்சிகை ஆக்க வெளியீடும் இடம்பெற்றன.இந் நிகழ்வானது பாடசாலை அதிபர் திரு திருப்பரங்கிரிநாதன் செந்தில்நாதன் தலைமையில் இடம்பெற்றது.பிரதம விருந்தினராக கலாநிதி சுப்பிரமணியம் குணேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.இவர் யா/சிதம்பராக் கல்லூரியின் சிறந்த தமிழ் ஆசிரியரும் சிறந்த எழுத்தாளரும் கவிஞரும் ஆவார்.இந் நிகழ்வில் பொது அறிவு வினாடிவினா போட்டி, கவிதை,பேச்சு, குறுநாடகம் ,பிரதம விருந்தினருடனான நேர் காணல்,நூலக வார போட்டி நிகழ்வுகளுக்கான பரிசில் வழங்கல் என ஒழுங்கமைக்கப்பட்டி ருந்தன நூலகப் பொறுப்பாசிரியர் திருமதி தர்ஷினி மணிக்குமார் நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தார்.அவரின் நன்றிகூறலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.இந்நிகழ்வானது இவ்வருடத்திற்கான வாசிப்பு மாதத் தொனிப் பொருளான மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் என்பதனை மையமாகக் கொண்ட மைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது."
ஆகஸ்ட் 31, 2024
சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட துவாரகனின் கவிதைகள்
-துவாரகன்
வரிசை குலையாத அழகு.
காற்றோடு கலந்த சுகந்தம்.
புத்துயிர்ப்புடன் ஈர்த்திடும் சோலை.
பந்தற்கால் அருகே
நிறுத்திவைத்த துவிச்சக்கரவண்டி.
சற்றுக் கண்ணயர்ந்த நேரம்தான்!
எந்தப் பறவையென்று தெரியவில்லை.
கைப்பிடி, இருக்கை, கைப்பை
அத்தனையும் கழித்துவிட்டுச் சென்றிருக்கிறது.
மிக இரகசியமாக,
அழுக்கைத் தெளிப்பதற்காகவே
காத்திருக்கின்றன
பறவைகளும்.
மனிதர்கள்போலவே!
සැඟව සිටින පක්සීන්
පේළිය අවුල්නොවන අනර්ඝත්වය
සුළඟ හා මුසුවූ සුගන්ධය
පුනර්ජීවයෙන් යුතුව ඇදගන්නා සු`ඵ ක්ෂේම භූමිය
පන්දලම අසල
නවතා තබන ලද බයිසිකලය
මදක් දැස පියාගත් විගස
කුමන පක්ෂියෙකු දැයි නොදන්නේය
හැඬලයේ, ආසනයේ, අත් බෑගයේ
සියල්ලෙහි මල පහ කරමින්ය
ඉතාමත්ම රහස්ගතව
අශූචි ගසන්නටම යැයි බලාගෙන සිටින්නෝය
පක්ෂීන් පවා
මිනිස්සුන් මෙන්
- තුවාරගන්
- සිංහලෙන් - ඉබ්නු අසූමත්
https://www.facebook.com/share/p/1BYrDZpM8R/
நீ நடந்த செம்மண் பாதையும்
உன் தந்தை வியர்வை சிந்தி உழைத்த
வயல்வெளியும்
உன் நினைவுத் திசுக்களில் இருந்து
அகற்றப்பட்டிருக்கின்றன
மண்சட்டியில்
முளைக்கீரைக் கறியாக்கி
திரளைச் சோறூட்டிய
உன் பாட்டியை
நினைவில்லை என்கிறாய்
உன் பெரியமாமன்,
சிவந்த மண்குழைத்துக் கட்டித்தந்த
மண்சுவர் வீடு
இது இல்லை என்கிறாய்.
உலக வரைபடத்தை விரித்து
விண்ணாணம் பேசும் உன்னால்,
உனது தெருவில் இருக்கும்
விஷகடி வைத்தியரைக்கூடத்
தெரிந்துகொள்ள முடியவில்லை.
உன் நரம்புமண்டலத்திலிருந்து
ஓர் இழை
மிகப் பத்திரமாகப்
பிடுங்கி எடுக்கப்பட்டிருக்கிறது
நூற்றாண்டுகளாய்த் தொடர்ந்த
உன் வேர்
ஆழத்தில்…
மிகமிக ஆழத்தில்…
புதைக்கப்பட்டிருக்கிறது.
இன்று நீ புதிய மனிதன்!
வேற்றுக் கிரகத்திலிருந்து வந்த
பறக்கும்தட்டு
உன்னை
இறக்கிவிட்டுச் சென்றிருக்கிறதுபோலும்.
05/2024
வேர்கள் மறைந்தே இருக்கட்டும்
அந்தரத்தில் மிதத்தல்
-துவாரகன்
மமதையை,
யுகங்களாகச்
சுமந்துவந்த காலம்
இந்த மனிதர்களின் கைகளில்
சேர்த்திருக்கிறது.
கபடம் நல்ல முகமூடி
அதிகாரம் ஒரு சப்பாத்து
அதற்குத் தெரிவதெல்லாம்
பூச்சிகளும் புற்களும்தான்.
அதிகார போதையில்
வானமும் வசப்படும்
சிட்டாய்க்கூடப் பறக்கலாம்.
பறந்தாலென்ன? அளந்தாலென்ன?
நிற்பதற்கு மண்ணுக்குத்தானே
வரவேண்டும்.
மண் புதைகுழி.
தீயும்கூடத் தின்று தீர்த்துவிடும்.
சாம்பல்கூடக் கரைந்துவிடும்.
எதுவுமில்லை எதுவும்.
042024
இன்று நீ என்ன செய்து கொண்டிருப்பாய்?
பிரமிப்பில் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டிருப்பாய்.
இனிப்புப் பலகாரங்களையும்
சில புதிய ஆடைகளையும்
வாங்கி வைத்திருப்பாய்.
பவுடர் அப்பிய முகத்துடன்
புன்னகை பூத்தபடி,
படியேறும்போது
எந்த வார்த்தையை முதலில்
பேசவேண்டுமென்று
மனப்பாடம் செய்து கொண்டிருப்பாய்.
ஆனால்,
உன்னைப் பார்த்து
நான் பரிதாபப்படுகிறேன்.
உனக்காக.
ஐந்து பகல்களும்
இரண்டு இரவுகளும்
அன்னியனின்
ஆயிரத்தெட்டு வண்ணங்களையும்
புலுனிகளின் கீச்சிடலுக்கும்
நாய்களின் குரைப்புகளுக்குமிடையே
நெருப்பில் சுட்ட
கருவாட்டு வாசனை நினைப்பில்
இதயம் கருக
ஏற்றுக்கொண்டாளே!
அது
நீ தேடிக்கொடுத்த
சுயநல இருள்.
உயர்ந்த நீர்த்தாங்கியில்
தொங்கிக் கொண்டிருக்கும் குளவிக்கூடுபோல்,
எல்லோர் கண்களிலும் துலங்குகிறது
வெட்டுக்கிளிகளின்
நூற்றியெட்டுக் கதைகள்.
நீ தேடிக் கொடுத்த
பரிசுகள் அவை.
அவளின் கட்டை
தீயில் வேகும்வரை
ஆறாதது!
14012022
அவரவர் நிலைக்கு இறங்கி வருகிறாய்
மனிதநேயம் என்கிறார்கள்
அவர்களோடு தேநீர் அருந்துகிறாய்
நட்பானவர் என்கிறார்கள்
அவர்களின் நலத்தை விசாரிக்கிறாய்
நல்ல மனிதர் என்கிறார்கள்
அநீதிக்கு எதிர்க்குரல் தருகிறாய்
நியாயமானவர் என்கிறார்கள்
ஏற்றத்தாழ்வை அகற்றக் கேட்கிறாய்
நீதிமான் என்கிறார்கள்
சந்நிதானத்தில் கண்மூடிப் பாடுகிறாய்
பக்தியானவர் என்கிறார்கள்
மரபுகளைக் கட்டியிழுக்கிறாய்
பண்பாடானவர் என்கிறார்கள்
உலக விவகாரங்களை உரத்துப் பேசுகிறாய்
அறிவாளி என்கிறார்கள்
எல்லாம் வல்லவை
கண்கள் விரிய வியக்கிறோம்.
ஒரு குரல்…
எல்லாம் எனக்குத் தெரியும்
கண்கட்டி வித்தை என்கிறது.
நீயும் வித்தைக்காரனோ?
5.
பாரமாகும் கற்கள் | துவாரகன்
வீதிகளிலும் வரிசைகளிலும் விசாரிப்புகளிலும்
உணர்வும் உடலும்
கரைந்து கொண்டிருக்கிறன.
மண்வெட்டியைச் சாய்த்துவிட்டு அன்றைய நாட்கூலியை
பிரித்துப் பார்க்கிறான்
களைப்பு நீங்காத உழைப்பாளி.
துலாக்கோல் கல்லாய்
அழுத்திக் கொண்டிருக்கும்
வாழ்வின் சுமையை
மடியில் சுருட்டிய தாள்கள்
ஏளனம் செய்கின்றன.
உயிர்க்கயிற்றை
கொஞ்சம் கொஞ்சமாய்
இழுத்துக் கொண்டிருக்கிறோம்.
அள்ளவே முடியாத
ஆழத்திற்கு
சென்றுகொண்டிருக்கிறது விடாய்தீர்க்கும் மருந்து.
26062022
4.
உறைந்துபோன கண்கள்
- துவாரகன் -
சொற்கள் செத்துப்போன கணங்களில்
கைகளும் கால்களும் உறைந்தன.
கண்கள் உயிரின் பாஷைகளாயின.
வெளிச்சத்தில் குறுகவும்
அதிசயத்தில் விரியவும்
பழக்கப்பட்ட கண்கள் அவை
பெருமரத்தின் கீற்றுத் துண்டுகள்
உயிர்கொண்ட கணத்தில்...
மண்ணும் கல்லும் சாந்தும்
குழைத்தெழுந்த சுவர்களுக்கு
ஈரத்தோடு உயிர்பிறந்தபோது,
மனிதர்களுக்காக கண்கள் பேசத் தொடங்கின.
எத்தனை ஜோடிக்கண்கள் பேசின
எத்தனை ஜோடிக் கண்கள் துடித்தன
எத்தனை ஜோடிக்கண்கள் இரந்தன
எத்தனை ஜோடிக் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன.
வாழத்துடிக்கும் ஆசை அந்தக் கண்களில் இருந்தது.
கருணையை கையேந்தி இரந்துகொண்டே
பலிபீடத்தில் வெட்டுண்டு கிடக்கும்
ஆட்டின் குருதியென உறைந்திருந்தன.
சுருட்டுப்புகையோடு
ஆறுதலாய்க் கதைபேசிச் செல்லும்
'சொக்கன்அண்ணா'
ஒருநாள் மாலைக்கருக்கலில்
பனையால் விழுந்து செத்துக் கிடந்தபோது
கண்கள் மட்டும்
விழிந்தபடியே உறைந்திருந்தன.
சொற்கள் செத்துப்போன கணங்கள் அவை.
குப்பையில் தூக்கிவீசப்பட்ட
ஒரு பொம்மையைப் போலவே!
04/2012
3.
புதிய மூன்று சிலுவைகள்துவாரகன்
பொய்யருக்கும்
காமுகருக்கும்
சட்டவிரோதிகளுக்கும்
இந்த அழகிய வெளி
திறக்கப்பட்டிருக்கிறது.
மூலையில் பதுங்கியிருக்கும்
உண்மையை
சவுக்கால் அடியுங்கள்.
ஒழுக்கத்திற்கு முட்கிரீடம்
சூட்டுங்கள்.
நேர்மைக்கு நஞ்சுகொடுத்து
சாவடியுங்கள்.
மீளவும் உயிர்க்காதபடி
மூன்று சிலுவைகளிலும்
முந்நூறு ஆணிகொண்டு
அறையுங்கள்.
நாங்கள் எல்லோரும்
பொய்யரைப் போற்றுவோம்.
நாங்கள் எல்லோரும்
காமுகரைக் கொண்டாடுவோம்.
நாங்கள் எல்லோரும்
சட்டவிரோதிகளுக்குப்
பன்னீர் தெளிப்போம்.
04012022












