ஜூலை 11, 2022

அநியாய உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்புக் கூறுவது?




அண்மைக்காலத்தில் விபத்து, தற்கொலை, வன்கொடுமை முதலானவற்றினூடாக அநியாயச் சாவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவை எதேச்சையாக நடக்கின்றனவா அல்லது குறித்த நபர்களின் கவனமின்மையால் நடக்கின்றனவா அல்லது குடும்பங்களின் பொறுப்பின்மை மற்றும் சமூக நிறுவனங்களின் கண்டுகொள்ளாத தன்மைகளால் நிகழ்கின்றனவா?
முப்பது வருடத்திற்கு மேலான யுத்தத்தினால் நாங்கள் இழந்தவை அதிகம். அந்த இழப்புக்களின் கண்ணீர்ப் படலங்கள் இன்னமும் நீங்கவில்லை. குண்டுவெடிப்புக் காலங்களில்கூட வீதியோரங்களில் திறந்தவெளிப் பதுங்கு குழிகளை அமைத்து மக்கள் தமது உயிர்களைப் பாதுகாத்து வந்தனர். பாடசாலை மாணவர்கள் அதிகமும் தம்மையும் அயலவரையும் பாதுகாத்துக்கொள்ளும் முதலுதவிப் பயிற்சியையும் அறிந்திருந்தனர்.
தற்காலத்தில் அநியாய உயிரிழப்புக்களை எங்களால் தடுக்கமுடியாது இருப்பதற்குக் காரணம் யாதாக இருக்கமுடியும்?
விபத்தினால் உயிரிழப்போர் தொகையே அதிகமாக இருக்கின்றது. இதற்கு போக்குவரத்து நெருக்கடி மற்றும் வீதிகளைக் குறை சொன்னாலும் குறித்த நபர்களின் அசண்டையீனமும் மற்றவர்களை ஒரு பொருட்டாக மதிக்காத திமிர்த்தனமும் காரணமாக இருப்பதாக எண்ணுகிறேன்.
நேரிலும் குறுக்கு வழியிலும் வருகின்ற அதிக பணப்புழக்கம் சாதாரணமானவர்களை ஒரு பூச்சிபோல ஏளனம் செய்வது மட்டுமல்லாமல் பெற்றோரின் கண்டிப்பு கைவிட்டுப் போனமையும் காரணமாக இருக்கலாம். சிறிய விடயங்களைக்கூடப் பேசித் தீர்க்கமுடியாத சந்ததியொன்று நியாயம் கதைப்பவரிடம் கைநீட்டுவது முதல் தாமே சட்டத்தைக் கையிலெடுத்து தீர்ப்பு வழங்குவதுவரை காண்கின்றோம்.
பொதுப்பரீட்சை முடியும் இறுதிநாளில் மாணவர் பொதுச் சொத்துக்களைச் சேதமாக்குவர் என்றறிந்து அரசாங்கமே சுற்றறிக்கை விடும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
கிராமங்களில் இருக்கும் பொது நிறுவனங்கள் பெயருக்கு இருக்காமல் மக்களுக்கு அறிவுரை வழங்கவும் வழிகாட்டலைச் செய்யவும் முன்வரவேண்டும். ஏதாவது உதவித் திட்டங்களுக்காக மட்டும் ஒன்றுகூடுவதற்கு மட்டுமா பொதுநிறுவனங்கள்? ஒருவரை இழப்பதன் வலியும் வேதனையும் அந்தக் குடும்பத்திற்குத்தான் தெரியும்.
எனவே, இந்த நிலைமைகளை மாற்ற நாங்கள் என்ன செய்யலாம்.
சமூகச் செயற்பாட்டாளர்கள் கிராமங்கள் தோறும் செயற்படவேண்டும். பெற்றோர் கூடிய கரிசனை எடுத்து பிள்ளைகளை வழிப்படுத்தவேண்டும். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற தலைக்கனமும் குடும்பப் பெருமைகளை பறைசாற்ற கற்றோர் மற்றோரின் கருத்துக்களைச் செவிமடுக்காத திமிர்தனமும் சரியான ஆலோசனை வழிகாட்டல் இல்லாத நிலைமைகளும் இவ்வாறானவைகளுக்கு வழிவகுக்கின்றன.
இவற்றை தவிர்த்து எமது சந்ததிகளை அறிவுள்ள ஆளுமையுள்ள செயற்றிறனுள்ளவர்களாக மாற்றுவதற்கு படைப்பாளர்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள் முன்வருவார்களா?

- சு.குணேஸ்வரன்

ஜூலை 02, 2022

எனது இணைய உரையாடல்கள்

 மஹாகவியின் வானொலி நாடகங்கள்

புத்தாக்க அரங்க இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பன்னாட்டு அரங்கக் கதையாடலில் மஹாகவியின் வானொலி நாடகங்கள் பற்றி நிகழ்த்திய உரை (டிசம்பர் 2021)


அ. முத்துலிங்கம் சிறுகதைகள் 

அ. முத்துலிங்கம் சிறுகதைகளில் உலக அனுபவங்கள் என்ற தலைப்பில் இலக்கியவெளி இணைய உரையாடலில் நிகழ்த்தியது (நவம் 2020)




அக்டோபர் 02, 2021

இலக்கியம் தந்த நட்பு

 

அண்மையில் குமிழி நாவலை எழுதி  வெளியிட்ட சுவிஸ் ரவி அவர்களின் உதவியுடன் மாணவர்களுக்கு ஒரு தொகுதி கற்றல்  கையேடுகள் வழங்கி வைக்கப்பட்டன. தற்போதைய கொவிட் சூழலில்  கற்றலுக்கு மிக அவசியமான பாட அலகுகளைத் தெரிவு செய்து தொண்டைமானாறு  வீரகத்திப்பிள்ளை  மகாவித்தியாலய  ஆசிரிய நண்பர்களின் உதவியுடன் தரம் 5, க.பொ.த சாதாரணதரம் மற்றும்  உயர்தரப்பிரிவு மாணவர்களுக்குத் தேவையான கையேடுகள் (வித்தியாலய பாட ஆசிரியர்கள் தயாரித்தவை, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைத் திணைக்களத்தின் புள்ளித்திட்டம், துறைசார்ந்தவர்களின் குறிப்புகள் ஆகியவை ) வழங்கப்பட்டன.

தரம் 5ற்குரியது, தமிழ் (O/L), ஆங்கிலம், விஞ்ஞானம், அரசியல் விஞ்ஞானம், தமிழ் (A/L), அளவையியல் , நாடகமும்அரங்கியலும் முதலான கையேடுகள் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இவற்றில் க.பொ. த சாதாரணதரம், மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான தமிழ்ப்பாடத்திற்கான ஒரு தொகுதி கையேடுகள் சிதம்பரக் கல்லூரி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.

ரவி அவர்கள் குமிழி நாவல் விற்பனை மூலம் பெறப்பட்ட இருபத்தையாயிரம்  ரூபாவை அனுப்பி வைத்து இந்தப் பணத்தை உங்கள் மாணவர்களுக்குப் பயன்படுத்துங்கள் என்று கூறியிருந்தபோது என்ன செய்யலாம் என ஆசிரிய நண்பர் ரூபரஞ்சனுடன் ஆலோசித்து இறுதியில் இந்த முயற்சியை மேற்கொண்டோம். கொவிட் பயணக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 3 கட்டங்களாகப் பிரதிசெய்து தந்த சர்மிலன் பிறிண்டேர்ஸ்  இன்பனுக்கும் கையேடுகளைத் தெரிவுசெய்து தந்த ஆசிரியர்களுக்கும் நண்பர் ரவி அவர்களுக்கும் மேலான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

-சு.குணேஸ்வரன் 
முன்னைய செய்தி ஒன்றும் இங்கே உள்ளது. 

மேலும் சில படங்கள் 








செப்டம்பர் 22, 2021

அதிபர் இரா. ஶ்ரீநடராசா : பணி நிறைவும் பிறந்தநாள் வாழ்த்தும்

 


எமது அதிபர் இரா. ஶ்ரீநடராசா அவர்கள் இன்றையதினம் (14.09.2021) தனது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

அவர் தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலத்தில் ஆற்றிய பணிகள், பெற்ற சாதனைகள், தொண்டைமானாறு கிராமத்தின் கல்வி மற்றும் சமூகச் செயற்பாடுகளில் அவர் முன்னின்று செயற்பட்ட காலங்கள் முக்கியமானவை.
80களின் நடுப்பகுதியில் இருந்து 92 வரை இயக்கங்களினதும் படைகளினதும் நெருக்கடிகளில் இருந்து இடைநிலைக் கல்வியையும் உயர்தரக் கல்வியையும் கற்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களில் நானும் ஒருவன். அந்தக் காலங்கள் மறக்கமுடியாத நினைவுகளை மீட்டக்கூடியவை.
அப்போது தொண்டைமானாறு கெருடாவில் பிள்ளைகளின் கல்வி மற்றும் சமூகச் செயற்பாடுகளில் இளைஞர்களும் பெரியவர்களும் இணைந்து பல மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றனர். வாணி அக்கடமி, யுனைற்றர் எடியுகேசன் சென்ரர், செல்வி கலாலயம், பின்னர் லிப்கோ அக்கடமி, மறுபுறத்தில் கெருடாவில் விவேகானந்தா கல்வி நிலையம், பிறைற் எடியுகேசன் சென்றர், முதலானவை இந்தப் பணியில் அப்போது காலத்துக்குக் காலம் இணைந்திருந்தன.
80 களில் அவரிடம் இடைநிலைக் கல்வியை கற்றேன். இன்று எழுத்தாளர் குந்தவை வசிக்கும் வீட்டுச் சூழலில் வாணி அக்கடமி என்ற கல்வி நிலையம் இயங்கியது. ஶ்ரீநடராசா அப்போது சைக்கிள் ஓடமாட்டார். நாங்கள் வகுப்புத் தொடங்கும் முன்னர் அவர் வீடு சென்று அவரை சைக்கிளில் ஏற்றி வருவோம். விஞ்ஞான பாடம் கற்பித்தவர், சித்திரமும் கற்பிப்பார். இவருடன் சமகாலத்தில் கல்வி கற்பித்த இளைஞர் தலைமுறையொன்றும் அப்போது இருந்தது. அது பற்றித் தனியாக எழுதவேண்டும்.
இந்திய இராணுவத்தின் நெருக்கடி காலத்தில் நாங்கள் பாதுகாப்பாகக் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக முதல் முதல் க.பொ. த உயர்தர வகுப்பை லிப்கோ அக்கடமியில் தொடங்கியவர். அக்காலங்களில் ஒரு பக்கத்தில் பிள்ளைபிடிகாரர்களையும் மின்கம்பங்களையும் பார்த்துக் கொண்டும் அடிஉதை வாங்கியும் படித்த காலங்கள் நினைவுகளில் எழுகின்றன.


எங்களை முதல் முதல் பட்டிமன்றம் ஏற்றிப் பேசவைத்தவர். இப்போ தொண்டைமானாறு வல்லைவீதியில் இருக்கும் கலைமகள் சனசமூகநிலையத்தில் பெரியளவில் எடுக்கப்பட்ட விழாவில் எங்களை அரங்கேற்றியவர்.
மிகச் சிறந்த ஓவிய வல்லுநர்கூட. எங்கள் வீட்டில் அப்பா வைத்திருந்த கம்பி லொறி, மொட்டை லெறி, A40 வான் முதலானவற்றுக்கு சைக்கிளில் ஏற்றி வந்து பெயர் எழுத வைத்திருக்கிறோம். அப்போது பெயர்ப் பலகைகள் எழுதுவதிலிருந்து வாகனங்களுக்கு பெயர் எழுதுவது, ஆலய திரைச் சீலைகளில் படம் வரைவது, ஓவியம் வரைவது வரை அவரின் கைவண்ணத்தில் காணக்கிடைத்தன.
கல்வி முயற்சிகள், கலை நிகழ்ச்சிகள் எல்லாம் அவரின் பட்டறையிலிருந்துதான் நாங்கள் தொடங்கினோம்.
பின்னர் தொண்டைமானாறு வித்தியாலத்தில் அவர் அதிபராகியபோதே அவருடனான பிற்காலத் தொடர்புகள் விரிந்தன.

அவரின் காலத்தில் பாடசாலை 4 முறை தேசியத்தில் கால் பதித்திருக்கிறது. விளையாட்டில் இரண்டு தடவையும், கலைத்துறையில் இரண்டு தடவையும் தனது முத்திரையைப் பதித்தது. கல்வி அடைவுகள் முதல் கிராமத்தின் ஆன்மீக, சமூகச் செயற்பாடுகளிலும் அவரின் பங்களிப்பு இருந்திருக்கிறது.
இன்று காலம் மாறிவிட்டது. மனிதர்கள் மாறிவிட்டார்கள், மனிதர்களின் குணங்களும் மாறிவிட்டன. அடிப்படை வசதிகள் இல்லாத சிறிய குக்கிராமங்களில் இருந்து வெளியே வரும் ஒவ்வொருவரின் உயர்வுக்கும் பின்னால் அதிபர் ஶ்ரீநடராசா போன்றவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் வழிகாட்டலும் மறைந்திருக்கிறது. அன்று நான் பார்த்த ஶ்ரீநடராசா அவர்களின் அன்பும் அரவணைப்பும் பண்பும் இன்றும் மாறவேயில்லை. அவரின் ஓய்வுகாலம் ஆரோக்கியத்துடன் சிறக்க வேண்டும்.
அன்பு மாணவனின் இனிய
வாழ்த்துக்கள்
.
கலாநிதி சு.குணேஸ்வரன்

ஜனவரி 26, 2021

குருகுலத்தில் -1

 மாணவருக்கு,

கல்வி அமைச்சும் தேசிய கல்வி நிறுவகமும் இணைந்து முன்னெடுத்திருக்கும் (ரூபவாகினி ஐ தொலைக்காட்சி) "குருகுலம்" கல்வி நிகழ்ச்சியில் தமிழ்ப்பாடம் தொடர்பான எனது காணொளிகள்

தரம் 6 தமிழ்



தரம் 9 தமிழ்



https://youtu.be/PFoLWuhWI7s